பரசிவ வெள்ளம் (பாரதி)

 
காவித் துணிவேண்டா, கற்றைச் சடைவேண்டா;
பாவித்தல் போதும் பரமநிலை யெய்துதற்கே

சாத்திரங்கள் வேண்டா சதுமறைக ளேதுமில்லை;
தோத்திரங்க ளில்லையுள ந்தொட்டுநின்றாற்போதுமடா !

உள்ளும் புறமுமாய் உள்ள தெலாந் தானாகும்
வெள்ளமொன்றுண் டாமதனைத் தெய்வமென்பார் வேதியரே.

காணுவன நெஞ்சிற் கருதுவன உட்கருத்தைப்
பேணுவன யாவும் பிறப்பதந்த வெள்ளத்தே.

எல்லை பிரி வற்றதுவாய் யாதெனுமோர் பற்றிலதாய்
இல்லையுள தென்றறிஞர் என்றும்மய லெய்துவதாய்,

வெட்டவெளி யாயறிவாய் வேறு பல சக்திகளைக்
கொட்டுமுகி லாயணுக்கள் கூட்டிப் பிரிப்பதுவாய்,

தூல வணுக்களாய்ச் சூக்குமமாய்ச் சூக்குமத்திற்
சாலவுமே நுண்ணியதாய்த் தன்மையெலாந் தானாகி,

தன்மையொன் றிலாததுவாய்த் தானே ஒருபொருளாய்த்
தன்மைபல வுடைத்தாய்த் தான்பலவாய் நிற்பதுவே.

எங்குமுளான் யாவும்வலான் யாவுமறி வானெனவே
தங்குபல மதத்தோர் சாற்றுவதும் இங்கிதையே.

வேண்டுவோர் வேட்கையாய் வேட்பாராய் வேட்பாருக்
கீண்டுபொரு ளாயதனை யீட்டுவதாய் நிற்குமிதே.

காண்பார்தங் காட்சியாய்க் காண்பாராய்க் காண்பொருளாய்
மாண்பார்ந் திருக்கும்,வகுத்துரைக்க வொண்ணாதே.

எல்லாந் தானாகி யிருந்திடினும் இஃதறிய
வல்லார் சிலரென்பர் வாய்மையெல்லாங் கண்டவரே.

மற்றிதனைக் கண்டார் மலமற்றார் துன்பமற்றார்;
பற்றிதனைக் கொண்டார் பயனைத்துங் கண்டாரே.

இப்பொருளைக் கண்டார் இடருக்கோர் எல்லைகண்டார்;
எப்பொருளுந் தாம்பெற்றிங் கின்பநிலை யெய்துவரே.

வேண்டுவ வெலாம் பெறுவார் வேண்டா ரெதனையுமற்
றீண்டுபுவி யோரவரை யீசரெனப் போற்றுவரே.

ஒன்றுமே வேண்டா துலகனைத்தும் ஆளுவர்காண்;
என்றுமே யிப்பொருளோ டேகாந்தத் துள்ளவரே.

வெள்ளமடா தம்பி விரும்பியபோ தெய்திநின
துள்ள மிசைத் தானமுத வூற்றாய்ப் பொழியுமடா !

யாண்டுமிந்த இன்பவெள்ளம் என்றுநின்னுள் வீழ்வதற்கே
வேண்டு முபாயம் மிகவுமெளி தாகுமடா !

எண்ணமிட்டா லேபோதும் எண்ணுவதே இவ்வின்பத்
தண்ணமுதை யுள்ளே ததும்பப் புரியுமடா !

எங்கு நிறைந்திருந்த ஈசவெள்ள மென்னகத்தே
பொங்குகின்ற தென்றெண்ணிப் போற்றி நின்றாற் போதுமடா !

யாதுமாம் ஈசவெள்ளம் என்னுள் நிரம்பியதென்
றோதுவதே போதுமதை உள்ளுவதே போதுமடா !

காவித் துணிவேண்டா, கற்றைச் சடைவேண்டா;
பாவித்தல் போதும் பரமநிலை யெய்துதற்கே

சாத்திரங்கள் வேண்டா சதுமறைக ளேதுமில்லை;
தோத்திரங்க ளில்லையுள ந்தொட்டுநின்றாற்போதுமடா !

தவமொன்று மில்லையொரு சாதனையு மில்லையடா !
சிவமொன்றேயுள்ளதெனச்சிந்தைசெய்தாற்போதுமடா !

சந்ததமு மெங்குமெல்லாந் தானாகி நின்றசிவம்,
வந்தெனுளே பாயுதென்றுவாய்சொன்னாற் போதுமடா !

நித்தசிவ வெள்ள மென்னுள் வீழ்ந்து நிரம்புதென்றுன்
சித்தமிசைக் கொள்ளுஞ் சிரத்தை யொன்றே போதுமடா !
[மகாகவி சுப்பிரமணிய பாரதி | ஞானப்பாடல்கள்]

Comments (4)

  1. மு. மயூரன் wrote::

    சோதனைப் பின்னூட்டம்

    Wednesday, September 30, 2009 at 6:36 am #
  2. vicneswaran wrote::

    வணக்கம் மயூரன்!
    மங்காத கணீர் என்ற உங்கள் குரலுடன் அழகிய தமிழ் உச்சரிப்பு மிகவும் நன்றாக இருக்கிறது…. தொடரட்டும் உங்கள் பணி…

    Tuesday, October 27, 2009 at 8:18 pm #
  3. sathiyan wrote::

    arumai arumai keddka keddka enpam “ANKUM PARA SIVA VELLAM” paajuthee enpam enpam anna

    Sunday, November 1, 2009 at 11:29 pm #
  4. VEERA wrote::

    Really sound enough to express bharathi’s voice. Well done and carry on your service.

    Sunday, November 8, 2009 at 2:49 pm #